மகிந்தானந்தவின் அலுவலகத்தை தாக்கிய நால்வர் கைது
கண்டி மாவட்டம் நாலப்பிட்டி நகருக்கு மத்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகத்தை தாக்கியதாக கூறப்படும் நான்கு இளைஞர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாவலப்பிட்டி மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் நேற்று நேர்நிலைப்படுத்தப்பட்ட பின்னர், தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நாவலப்பிட்டி நகருக்கு மத்தியில் பேரணியாக வந்த சிலர் நகரில் உள்ள மகிந்தானந்த அளுத்கமகேவின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக மகிந்தானந்தவின் பிரத்தியேக செயலாளர் 16 பேருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று நான்கு பேரை கைது செய்தனர். சட்டவிரோதமாக ஒன்றுக் கூடியமை, அழிவை ஏற்படுத்தியமை, கொள்ளையிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நாவலப்பிட்டி பொலிஸார், சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சந்தேக நபர்களின் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் சுயமாக முன்வந்து வாதாடி பிணையை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நாவலப்பிட்டி பகுதியை 25 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(நாவலப்பிட்டி நகர்)