யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல்
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04.02.2026) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
கடந்த 04.02.1957 அன்று இலங்கையின் சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.
இந்த நிலையில் திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
நினைவேந்தல்
அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.
தியாகி நடராஜனின் 69வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜனின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.




