இலங்கைக்கு ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டது
இந்தியாவிலிருந்து விமானத்தினூடாக ஒரு இலட்சம் லீட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள உரத்தை கமநல சேவை மையங்களினூடாக இன்று முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வுரத்தில் மிகுதி 31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ளது.
அண்மையில் அமைச்சரவை 9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான நனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விசேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருந்தது.
இதனையடுத்து, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விசேட திரவ உரத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விசேட திரவ உரம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL - 1156 என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 00.25க்கு, இந்தப் பசளை கொண்டு வரப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ச,
டீ.வீ.ஷாணக்க உள்ளிட்ட தரப்பினர், மேற்படி பசளைத் தொகையை, கொழும்பு
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொறுப்பேற்றனர்.