வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நாமல் எழுப்பும் கேள்வி
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளகை் கொடி விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச உத்தரவிட்டதாக கூறும் பொன்சேகா, பிரிதொரு சந்தர்ப்பத்தில் மஹி்ந்த, விடுதலைப் புலிகள் தப்பிக்க உதவியதாக கூறுவது வேடிக்கையானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலைகாரர் அல்ல என சரத் பொன்சேகா பொதுவெளியில் தெரிவித்திருப்பது நல்ல முன்னேற்றமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள்
அண்மையில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு பொதுமக்கள் முன்னிலையில் ஊடகங்கள் வழியாக அழைப்பு விடுத்தது மகிந்த ராஜபக்சவே என அவர் குறிப்பிட்டார்.

போர் சூழலில் இராணுவத்திடம் சரணடையுமாறு அழைப்பது அபூர்வமான ஒன்றல்ல எனவும், அதேவேளை போரின் போது வழங்கப்பட்ட உத்தரவுகள் குறித்து சரத் பொன்சேகா பல்வேறு காலங்களில் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
இராணுவ நடவடிக்கைகள் தமிழர் சமூகத்துக்கு எதிராக அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படும் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிர்தியாகம் செய்ததாகவும், குறைந்தளவு உயிரிழப்பு மற்றும் சொத்து சேதத்துடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே மகிந்த ராஜபக்சவின் நோக்கமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
சில அரசியல் குழுக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, மகிந்த ராஜபக்ச “இரத்தத்திற்காக ஏங்கிய கொலைகாரர்” அல்ல என்பது குறித்து சரத் ஃபொன்சேகா விளக்கம் அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாமல் ராஜபக்ச கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி, அழிவை ஏற்படுத்திய தலைவராக அல்லாது, நாட்டிற்கு சுதந்திரத்தை கொண்டு வந்த தலைவராக நினைவுகூரப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

போருக்குப் பிந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை மகிந்த ராஜபக்சவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக சுட்டிக்காட்டிள்ளார்.
குறைந்தளவு உயிரிழப்புடன் நாட்டிற்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதே அவரது பிரதான இலக்காக இருந்தது என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam