தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும் - அநுரவுக்கு நாமல் எச்சரிக்கை
நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய 'திசைகாட்டி' அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
மாத்தறை - கொடபொல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்கள்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டு கொழும்பில் டை, கோட் அணிந்து திரியும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு, நமது இராணுவ வீரர்கள் பெருமையுடன் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் வெறும் 'இரும்புத் துண்டுகளாகத்' தெரியலாம்.
ஆனால், அந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருப்பது மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடைப்பட்ட ஒரு பெரும் போராட்டம் ஆகும்.

இன்று இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக மூச்சு விடுவதற்குக் காரணம் அன்று போர்க்களத்தில் இரத்தம் சிந்திய எமது இராணுவ வீரர்களே என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
கடந்த காலத்தில் எமது அரசு மேற்கொண்ட கொழும்பு துறைமுக நகரம், நெலும் குளுன, அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை 'திருட்டுத் திட்டங்கள்' என அன்று கடுமையாக விமர்சித்த ஜே.வி.பி., இன்று அதே திட்டங்களை சர்வதேச முதலீட்டாளர்களிடம் காட்டிப் பெருமை பேசி வருகின்றது.
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அன்று தம்மால் தீவிரமாக எதிர்க்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் கொழும்புத் துறைமுக நகரத்தையே நாட்டின் முதன்மைப் பொருளாதார மையமாக இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
பொருளாதாரக் கொள்கை
நாட்டின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளன. உர மூடை ஒன்றின் விலை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபா வரை உயர்ந்துள்ள போதிலும், அரசு உரிய நேரத்தில் உர மானியங்களை வழங்குவதில்லை.
உள்நாட்டு நெல் களஞ்சியங்கள் நெல் தேங்கிக் கிடக்கையில், அரசு திட்டமிட்டு வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றது.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதும் மக்கள் மீது இவ்வாறான அநியாய வரிகள் விதிக்கப்படவில்லை.
ஆனால், இன்று மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை மற்றும் வரிகள் மூலம் மக்கள் தாங்க முடியாத சுமையை எதிர்கொள்கின்றனர்.
எரிபொருள் விலையை 100 ரூபாவால் உயர்த்திவிட்டு, பின்னர் 20 ரூபாவை குறைத்து அரசு நாடகமாடுகின்றது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
உரம் இல்லை என்று கேட்கும் விவசாயிகளைப் பொலிஸாரைக் கொண்டு மிரட்டுவதும், உரிமைகளுக்காக வீதிக்கிறங்கும் பட்டதாரிகள் மீது தாக்குதல் நடத்துவதுமே இந்த அரசின் இன்றைய சாதனையாக உள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மீன் இருக்கும் இடத்தைக் காட்டுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்று கடற்றொழிலாளர்கள் தங்களின் படகுகளுக்கு எரிபொருள் அடிக்கக்கூட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலை நடத்தினாலும் தங்களுக்குப் பலத்த அடி விழும் என்பதால் அரசு திட்டமிட்டுத் தேர்தல்களைத் தவிர்த்து வருகின்றது.
மகா சங்கத்தினரை (பௌத்த துறவிகளை) அவமதிப்பதன் மூலமும், அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுப்பதன் மூலமும் மக்களின் பசியைத் தீர்த்துவிட முடியாது என எச்சரிக்கின்றேன்.
எனவே, நாட்டு மக்களின் யதார்த்த நிலையை உணர்ந்த, பொய் கூறாத, சர்வதேசத்துடன் சுமுகமாகப் பழகக்கூடிய ஒரு பலமிக்க தேசிய சக்தியைக் கட்டியெழுப்ப தங்களோடு கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என