நீதிமன்றத்துக்கு வெளியே வந்து நாமல் ராஜபக்ச எம்.பி. ஆவேசம்
நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகாரப் போதையில் மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டினார்.
கொழும்பு புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (30.7.2026) முன்னிலையான பின்னர், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தரைமட்டத்தின் உண்மையான ஆழம் புரியாமல் உயரத்தில் பறக்கும் இந்த அரசாங்கம், பாய்ந்து பார்க்கும் போது தான் எவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்ளும். அவ்வாறு விழுந்து அடிபட்டு விநாசமடைவதற்கே அரசாங்கம் முற்படுகின்றது.
நாட்டின் நீதித்துறை மீது தமக்கு இன்னமும் முழுமையான நம்பிக்கை உள்ள போதிலும், தற்போதைய பொலிஸ் கட்டமைப்பு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு 'ஜே.வி.பி பொலிஸாக' அல்லது 'பலவத்தை பொலிஸாக' செயற்படுவதால் பொலிஸார் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் திட்டம் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்து அரசமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது வரலாற்றுப் பிழையாகும். இத்தகைய நபர்களை மையமாகக் கொண்ட திருத்தங்களால் நாட்டிற்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை.
நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, அசாத்தியமான வரிச்சுமை மற்றும் விலை உயர்வால் திண்டாடி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மீனவர்களும் கடுமையான வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசு தங்களின் உத்தேச அரசமைப்புத் திருத்தங்கள் மற்றும் அதிகார மமதையில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது என்றார்.
வழக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாவை 'என்.ஆர் கன்சல்டன்சி' நிறுவனத்தில் முதலீடு செய்து பணச்சலவையில் ஈடுபட்டதாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2015ஆம் ஆண்டு 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது.
இரண்டு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசீலித்து விவரங்களைப் பெற வேண்டியுள்ளதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கால அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்
இந்த வழக்கில் பிணையில் உள்ள நாமல் ராஜபக்ச, நித்யா சேனாதி சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொடை ஆகிய நால்வரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
அத்துடன், 'கவர்ஸ் கோர்பரேட் சர்வீசஸ்' நிறுவனத்தின் மூலம் முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட 125 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்திப் பங்குகளைக் கொள்முதல் செய்ததாகச் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு நிதிச் சலவை தடுப்பு வழக்கும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 7 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam