இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியத் தூதுவருடன் நாமல் முக்கிய கலந்துரையாடல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை நேற்று நேரில் சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருதரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரக் காட்சிகள் குறித்தும், அவை இலங்கை போன்ற வளரும் நாடுகளின் மீது எவ்வாறான தாக்கங்களைச் செலுத்துகின்றன என்பது குறித்தும் இருவருக்கும் இடையே ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இருதரப்பு உறவு
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான, பல தசாப்த கால இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது நினைவூட்டப்பட்டுள்ளது.

தற்போது இரு நாடுகளினதும் கூட்டுறவோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைவரங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்காலப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை மேலும் பலமான முறையில் வலுப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து இருதரப்புப் பார்வைகளும், ஆலோசனைகளும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.