ஆதாரமின்றி கைது செய்யப்படும் பெரும் புள்ளிகள்.. ரணில் வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகளை அடக்குவதை நோக்கமாகக் கொண்ட செயன்முறையொன்றில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும், "அரசாங்கம் தற்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), வைத்தியர்கள் மற்றும் பௌத்த துறவிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதுடன், அரசியல் கட்சிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வருகின்றது.
மேலும், அரசியல்வாதிகள் போதிய ஆதாரங்களின்றி கைது செய்யப்படுகின்றனர், இந்நடவடிக்கைகள் ஜனநாயகம், எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அரசாங்கத்தின் இலக்கு..
இன்று மேற்கொள்ளப்படும் அனைத்தும் நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அத்துடன் சுயாதீன தொழிற்சங்கங்களை ஒழிக்கும் முயற்சியும் இடம்பெறுகிறது.

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்கான ஏற்பாட்டைச் சேர்க்காததால் ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்தது.
எனவே, இதன் சட்டபூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கட்சி நீதிமன்றம் ஊடாக சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியுள்ளது.
அத்துடன், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்முறை அமைப்புகளை அரசாங்கம் இலக்கு வைக்கின்றது. பௌத்த துறவிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் கவலையளிக்கின்றன.

இவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பையும் மக்களின் இறையாண்மையையும் சீர்குலைக்கும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குப் பேசுவதற்குப் போதிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவரால் அழைக்கப்பட்ட போதிலும் ராஜீவ் அமரசூரிய நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இந்த மாற்றங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இந்நாடு நாடாளுமன்றத்தில் இருந்தா அல்லது பெலவத்தையில் இருந்தா ஆட்சி செய்யப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.