அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறிய முக்கிய அரசியல்வாதி - சிஐடியினருக்கு கசிந்த தகவல்
மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உயர் நீதிமன்றம் பயணத்தடை விதிப்பதற்கு முன்பே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவியல் புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையின் போது இது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்வதற்கு தடை உத்தரவு
கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்று, பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர உட்பட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பயணத்தடையை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு கூடுதலாக, பிரேமலால் ஜெயசேகர உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கும் அக்டோபர் 21 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகள் அனுப்புமாறும் அந்த அமர்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளின்படி, குற்றவியல் புலனாய்வுத் துறை சட்ட நடவடிக்கைகளை நடத்திக்கொண்டிருந்தபோது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
நாடு திரும்பி விமான டிக்கெட் முன்பதிவு
இருப்பினும், பிரேமலால் ஜெயசேகர, திரும்பி வருவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாடு சென்றதாக குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு அரசியல் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததற்காக, பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
அந்த தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகரவும் பிரதிவாதிகளும் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு சட்டத்திற்கு முரணானது என்றும், தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளும் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில், பிரதம நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri