இருமடங்கு தேசிய சொத்துகளை அழித்த ஜே.வி.பி - எல்.டி.டி.ஈ அமைப்பு! நாமல் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த காலங்களில் திட்டமிட்டு அழித்துள்ளன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று(14) மாலை அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
"கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு மாபெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்களே இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசின் மீது வீண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

தற்போதைய அரசின் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாளுக்கு நாள் முரண்பாடான கருத்துக்களைக் கூறித் தங்களது நிர்வாக இயலாமையை மறைக்க முயல்கின்றனர்.
அத்தோடு, இந்தக் கோரத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றில் உதவிய சட்டத்தரணிகள் மற்றும் கடந்த காலத்தில் இது தொடர்பான விசாரணைக் கோப்புகளை மூடிமறைத்தவர்களுக்கே இந்த அரசு இன்று அரச கட்டமைப்புக்குள் உயர் பதவிகளை வழங்கி கௌரவித்துள்ளது.
அரசு தான் வழங்கிய பொய் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் அம்பலமாவதைத் தடுப்பதற்காக, தங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளுவதற்குத் தற்போது தயாராகி வருகின்றது.
அவல நிலை
நாட்டின் தற்போதைய விவசாய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பெரும்போகத்துக்கான உரத்தை விவசாயிகளுக்கு முறையாக வழங்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு திட்டமும் இல்லை.
உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு நெருக்கமான ஒருசில பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்காக வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்து இந்த அரசு மடிவளர்க்கின்றது.
இதனால் நெல், காய்கறி, பழங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளும், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் கடுமையான கடன் சுமையில் சிக்கித் தங்களது வியாபாரங்களை முழுமையாக மூடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், நாட்டை கட்டியெழுப்பப் புதிய நிதியங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகப் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறப்பட்டாலும், நாடாளுமன்றக் குழுக்களில் அவ்வாறான நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
அரசாங்கக் கணக்குகளில் உள்ள பொதுமக்களின் பணம் தவறான கணக்குகளுக்குச் செல்வதாகவும் தெரியவருகின்றது. சாதாரண மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வரிகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பும் அதிகாரிகள், அரசுடன் தொடர்புடைய பெரும் வர்த்தகர்களின் கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் முறைகேடாகச் செல்லும்போது மௌனம் காக்கின்றனர்.
வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..
பட்டதாரிகளுக்கு வேலை
அதிகப்படியான வரிச்சுமையால் கிராமப்புறக் கடைகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசால், தனியார் துறையில்கூட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
கிராம மட்டத்திலிருந்து மத வழிபாட்டுத் தலங்களையும் எல்லைக் கிராமங்களையும் பாதுகாத்த சிவில் பாதுகாப்புப் படை இளைஞர்கள், தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காகக் கொழும்புக்குக் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கொண்டு கொழும்பு போன்ற பெருநகரங்களில் வாழவும் முடியாமல், கிராமத்திலுள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணம் அனுப்பவும் முடியாமல் அந்த இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மற்றும் சாமானிய மக்களுக்காகப் பேசுவதாகக் கூறி ஏழை மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, இன்று சாதாரண மக்களின் துயரங்களை ஏறிட்டும் பாராது, பெரும் வர்த்தகர்களின் முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஒரு மினுமினுப்பான ஆட்சியாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri