தனிநபர் ஆதாயத்திற்காக அரசை அடகு வைத்தாரா அர்ச்சுனா..! நளிந்த ஜயதிஸ்ஸ கடும் எச்சரிக்கை
நாட்டில் கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்கினார்கள் என அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.
இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக பேசினாரா அர்ச்சுனா
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேடையிலும் அதற்கு வெளியிலும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாக அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது. அரசின் தேர்தல் பிரசாரங்களுக்குப் புலம்பெயர் இலங்கை தமிழர்களால் நிதி உதவி வழங்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.
வதந்திகளுக்கு பதிலடி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேடையில் நின்றுகொண்டு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும், அவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. அர்ச்சுனாவைத் தவிர புதிய நபர்கள் எவரும் அந்தக் கூட்டத்தில் இணையவில்லை.

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவெடுத்துள்ள போதிலும், பழைய அரசியல்வாதிகள் தங்களது பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
அத்தகைய நிராகரிக்கப்பட்ட கலாசாரத்தையும் தலைவர்களையும் மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தீவிரவாத அமைப்புகளின் மீள் எழுச்சி அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றார்கள் என்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.