படுகொலை செய்த நபர் 11 மாதங்களின் பின்னர் கைது!
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் 11 மாதங்களின் பின்னர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் கையளிப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்ரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன்னிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11 மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.