மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல்: பிரதான சந்தேகநபர் கொழும்பில் கைது!
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வைத்து நேற்று(29.03.2026) கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும் இளம் தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல்பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
24 மணி நேரத்திற்கு தம்பதி உட்பட ஐவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ன ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், அவரது 34 வயதுடைய கணவர் மற்றும் 22 வயதுடைய தம்பி, கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊரணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் மீட்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கோடரி போன்ற கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதான சந்தேகநபர் கைது
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், நேற்று (29) மயக்க மருந்துகளை வழங்கி கொள்ளையர்களை இயக்கி வந்த பிரதான சூத்திரதாரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வத்தளை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய சிவா என்றழைக்கப்படும் திவாகரன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.