குஜராத் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
சண்டிகரில் இன்று(30) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
மும்பை அணி
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
முதல் விக்கெட்டுக்கு 84 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜோனி பேர்ஸ்டோவ் 22 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களும், திலக் வர்மா 25 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
ரோகித் சர்மா 50 பந்தில் 81 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அணி
இதையடுத்து, 229 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் 20 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் வோஷிங்டன் சுந்தர் இணைந்து அபாராமாக விளையாடினர்.
வோஷிங்டன் சுந்தர் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில்அரை சதம் கடந்த சாய் சுதர்சன் 49 பந்தில் 80 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரதர்போர்டு 24 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில், குஜராத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
தகுதிச்சுற்று
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2ற்கு முன்னேறியுள்ளதுடன் குஜராத் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
தகுதிச்சுற்று 2 ஜூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.