எங்கள் வீட்டு முற்றங்களை இன்று முள்ளிவாய்க்கால் முற்றங்களாக்குவோம்! - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறைகூவல்
எமது அன்பார்ந்த தமிழ் மக்களே! கோவிட்டை காரணம் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடக்கப்பட்டிருப்பதால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
அத்துடன், இன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
"இன்று மே 18. தமிழினப் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளாகும். தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர்கொள்கின்றோம்.
எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீள அமைக்க வழிவிட்டது.
இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு முள்ளிவாய்க்கால் வந்து அழுது ஆறிச்செல்லும் நினைவுச்சுடர் தூபியை அரசு மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுகளையும் வஞ்சகமாகக் கவர்ந்து சென்றுள்ளது.
மேலும், கோவிட்டை காரணம் காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்தவிதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுக முடியாதபடி அரச தரப்பினரும் அதன் படையினரும் தடுத்துள்ளனர். இவர்களது இழி செயலுக்கு வரலாறு பதில் சொல்லும்.
ஆகவே, எமது அன்பார்ந்த தமிழ் மக்களே! இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முடக்கப்பட்டிருப்பதால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக் கொண்டபடி இன்று மாலை 6 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம். எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம்.
இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தயாரித்து உண்போம். அந்தவேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப் படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம்.
நினைவிடத்தை அழிக்கலாம்; நினைவுகளை
அழிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வோம்" என்றுள்ளது.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
