முள்ளிவாய்க்காலில் வீதிகளை மூடுவதற்கு ஆயத்தம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பொலிஸார் வீதி தடைகளை இடுவதற்கான பொருட்களை குறித்த பகுதிக்கு கொண்டுவந்துள்ளதாக தெரியவருகிறது.
மே 18ஆம் திகதி இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் வருடம் தோறும் தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டித்து வருகின்றனர்.
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைத்து உலகம் பூராகவும் உள்ள தமிழ் உறவுகள் மே 12 தொடக்கம் 18 வரை இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்த பலருக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பொலிஸார் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியில் பொலிஸ் நீதித்துறை போடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.