முள்ளிவாய்க்கால் - இனத்தின் குருதியாலும் வலியாலும் எழுதப்பட்ட வரலாறு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் (மே 12-18) என்பது ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விடயமல்ல; அது பன்னெடுங்காலமாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனத்தின் குருதியாலும் வலியாலும் எழுதப்பட்ட வரலாற்றை உலகிற்கு மீள நினைவூட்டும் காலமாகும்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனப்படுகொலை, வெறும் ஆயுதப் போரின் இறுதிக்கட்டமாக அல்லாது, பல தசாப்தங்களாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தமிழ் இன அழிப்பின் உச்சக்கட்டமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.
இனப்படுகொலையின் கொடூரம்
அந்த இனப்படுகொலையின் கொடூரத்தைப் பிரதிபலிக்கும் முக்கியமான தரவாக, முள்ளிவாய்க்காலில் வலிந்து அடைக்கலம் புகவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களுள் 146,679 பேர், 2009ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டதாக பல்வேறு தமிழ் தேசிய ஆவணங்களிலும் அரசியல் உரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை வெறும் புள்ளிவிவரமாக அல்லாது உற்றாரை இழந்த உறவுகள், பெற்றோரை இழந்த தலைமுறைகள், பெயரற்ற நடுகற்கள் என இன்னமும் நீதி தேடியலையும் தேசம் அவாவி நிற்கும் ஒரு இனத்தின் கூட்டு வேதனை.

ஆனால் இத்தகைய பாரிய இனவழிப்பைச் சந்தித்த இனத்தின் அரசியல், வரலாற்று நினைவுகளை பாதுகாக்க வேண்டிய தருணத்தில், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் தரப்புகளின் மௌனம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, அரசியல் விடுதலை ஆகியவற்றைப் பெற்றுத்தருவதாகக் கூறி மக்கள் ஆணையைப் பெற்ற பிரதான கட்சியாக இருந்தபோதிலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் திருகோணமலையில் பெரியளவிலான நினைவேந்தல் முன்னெடுப்புகள் எதுவும் காணப்படாதிருப்பது வேதனையளிக்கிறது.
மே 18
மே தினத்திற்காக (தொழிலாளர் தின நிகழ்வு) பெருமளவில் செலவீனங்களை மேற்கொண்டு மக்களை திரட்டியும், அரசியல் வலிமையை வெளிப்படுத்தியும் செயல்பட்ட அரசியல் இயந்திரம், மே 18 இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தில் ஏன் மௌனம் காக்கிறது என்ற கேள்வி தொடர்ந்தும் மக்களிடையே நம்பிக்கையீனத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த மௌனம் அரசியல் மறதியா? அல்லது நினைவுகளையும் வரலாற்றையும் வாக்கு அரசியலுக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொண்டே பாதுகாக்க மறந்த வரலாற்றுத் தவறா? திருகோணமலையை “தமிழர் தலைநகர்” என்று அரசியல் மேடைகளில் பெருமையுடன் கூறிக்கொண்டாலும் இந்த மண்ணில், இன்னமும் ஒரு பொதுவான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கூட இல்லாதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தமிழரசுக்கட்சியின் வசமுள்ள திருகோணமலை மாநகர சபை நிர்வாக எல்லைக்குள், தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளை நிலைநிறுத்தும் நிரந்தர நினைவேந்தல் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் மிகப்பெரிய கோரிக்கையாக மாறியிருக்கிறது.
ஒரு இனத்தின் நினைவுகளை காப்பதும் கடத்துவதும் வெறும் உணர்ச்சி சார்ந்த விடயம் மட்டுமல்ல, அனைத்து வழிகளிலும் நிர்க்கதியாகி நிற்கும் இனமொன்றின் அரசியல் கடமையும் வரலாற்றுப் பொறுப்புமாகும். நினைவுகள் மற(றை)க்கப்படும் போது, எதிர்கால தலைமுறைகள் தங்கள் வரலாற்றை இழக்கத் தொடங்குகின்றன.
ஆகையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வெறும் அஞ்சலி நிகழ்வுகளால் மட்டுப்படுத்தப்படாமல், சமூக பங்கேற்புடன் கூடிய வரலாற்று விழிப்புணர்வு வாரமாக மாற்றப்பட வேண்டும்.
வரலாற்று நினைவு
திருகோணமலையில் அதற்கான முன்னெடுப்பிற்கான சில முன்மொழிவுகளாக; – திருகோணமலையில் நிரந்தர நினைவேந்தல் தூபி ஒன்றை நிறுவுதல். – குருதிக்கொடை முகாம்களை நடத்துதல். – பாடசாலைகள், ஆலயங்கள், பொதுஇடங்களில் தினசரி நினைவுச் சுடரேற்றல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல். – மாணவர்களுக்கிடையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வரலாற்று நினைவுணர்வை வளர்க்க முற்படுதல். – தமிழர் வரலாற்று நினைவிடங்களில் சிரமதானங்கள் மற்றும் சமூகப் பணிகள் முன்னெடுத்தல்.
ஆயுதம் போராட்டம் நிறைவுக்கு வந்த பின் தொடர்கின்ற சிந்தனைத்திறன் மீதான யுத்தம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மிகப்பெரும் தாக்கம் நினைவிழப்பே.

எம்மீது நிகழ்ந்த இனப்படுகொலையையும் அரசியல் ஒடுக்குமுறையையும் மறக்கச் செய்து, வரலாறற்ற சமூகமாக மாற்ற முயலும் அரசியல் சூழமைவில், எமது வரலாற்று நினைவுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது ஒரு பெரும் பணியாகவும், கூட்டுப் பொறுப்பாகவும் கையிலெடுக்கப்பட வேண்டும்.
ஆகவே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை துன்பியல் சம்பவங்களை எண்ணி வருந்துவதற்கான துக்க தினமாக கடந்து செல்லாமல் நீதி மறுக்கப்படும் ஒரு இனத்தின் அடையாளங்களை நிலைநிறுத்தி சமூகமாக மீண்டு வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கூட்டுப்பொறுப்பினை தாயகம் முழுவதும் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் தமிழர் வாழும் ஒவ்வொரு ஊர் ஊராகவும் வீடுவீடாகவும் ஒவ்வொரு தமிழனுமாக நாம் அனைவரும் கைக்கொள்வோம்.
ஒவ்வொரு தனிமனிதனுக்குமான இந்த வரலாற்றுப்பொறுப்பினைக் காட்டிலும் எங்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகளுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது என்பதையே வலியுறுத்தப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 14 May, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam