சுமந்திரன் எம்பியை மறைமுகமாக தாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (Video)
யாழ்ப்பாணத்தில் ஒரு இனம் வெளியேற்றப்பட்டது, அதற்கு இனச்சுத்திகரிப்பு என கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது என கூற தயங்குகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்காக சர்வதேசம் எமக்கு உதவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - அம்பாறை இலங்கை தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வின் 14 ஆவது நிறைவினை அனுஷ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய இனப்படுகொலை
அங்கு கருத்து தெரிவித்த அவர், எங்களுக்கு ஏற்பட்டது பாரிய இனப்படுகொலை.
ஆனால் எங்களது அரசியல்வாதிகள் சிலர் கூட இன்று இனப்படுகொலை என கூறுவதற்கு வாய் கூசினவர்களாக இருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரு இனம் வெளியேற்றப்பட்டது. அதற்கு இனச்சுத்திகரிப்பு என கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது என கூற தயங்குகின்றார்கள்.
உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்காக சர்வதேசம் எமக்கு உதவ வேண்டும்.
தியாகங்கள்
இந்த இறந்த ஆத்மாக்கள் எந்த நோக்கத்திற்காக செயற்பட்டதோ நாமும் அதற்காகவே செயற்பட தயாராக வேண்டும். அவர்களின் தியாகங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதற்காக இலங்கை தமிழரசுக்கட்சியினர் ஒற்றுமையாக உழைக்க கடமைப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த நிகழ்வின் போது நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றது. பின்னர் பூசையை தொடர்ந்து நினைவுச்சுடர் மாவீரர் குடும்பம் சார்பாக இரு தாய்மார் ஏற்றினர்.
அத்துடன் 1 நிமிடம் மௌன அஞ்சலியுடன் ஏனையோர் சுடர் ஏற்றினர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.