கடற்படை புலனாய்வு அதிகாரியின் முறைப்பாடு: முல்லைத்தீவு ஊடகவியலாளர் பிணையில் விடுவிப்பு
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலனை பிணையில் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, நேற்றைய தினம் ( 29.02.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவரால் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு பொலிஸாரினால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் (20.04.2019) கைது செய்யப்பட்டிருந்தார்.
கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை
பின்னர், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் 04.05.2023 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றபோது வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு வருவதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 2023-09-21ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் 2023-09-21அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ்.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.
இருப்பினும், அன்றும் வழக்கு தொடுனர் வருகை தராமையினால் கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் நீதிபதிக்கு தெரிவித்தனர். இந்நிலையில், கடற்படை புலனாய்வாளர் மற்றும் அவரது சாட்சி ஆகிய இருவருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு 2024.02.29ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.
இதற்கமைய, குறித்த வழக்கானது நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.எஸ். தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார்.
கவனயீர்ப்பு போராட்டம்
இதன்போது, குறித்த கடற்படை புலனாய்வாளரும் வருகை தந்திருந்தார். ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில், வழக்கு விளக்கத்துக்காக மார்ச் 28ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.2019 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.
இதன் போது, செல்வபுரம் பேருந்து நிலையத்தில் ஒளிந்திருந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இனம் தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததோடு குறித்த நபர் தனது கைபேசியில் ஒளிப்படமும் எடுத்துள்ளார்.
பொலிஸாரின் தாமதம்
ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அடையாளப்படுத்த முற்பட்டவேளை குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரணை மேற்கொண்ட போது சண்முகம் தவசீலன் தலையிட்டு குறித்த நபர் யார் என வினவியுள்ளார். அதற்கு தான் கடற்படை அதிகாரி என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்திருந்த போதிலும் அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமாகியுள்ளது.
கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அன்று மாலை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.
தொடரும் வழக்கு விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் 20.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான சண்முகம் தவசீலன் அவர்களை முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரை கைது செய்துளளனர்.
இந்நிலையிலேயே, நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




