முல்லைத்தீவு வலயத்துக்கு கல்விப் பணிப்பாளர் தேவை
முல்லைத்தீவு வலயத்துக்கு, வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு, வடமாகாணக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் தவராசா அமலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த வலயக் கல்விப் பணிப்பாளர் ஓய்வுபெற்று சென்று ஒரு மாதம் கடந்த நிலையிலும், இதுவரை புதிய கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை .
தற்போது, பயணக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனையால் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்த அவர், போரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைக் கொண்டுள்ள ஒரு வலயத்தின் தேவைகளை நிறைவு செய்கின்ற பொறுப்பு வலயக் கல்வி பணிமனைக்கே உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.
ஆனால், நிரந்தர வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் இல்லாமல் அப்பணிகளை இலகுவில் நிறைவேற்ற முடியாதெனத் தெரிவித்த அவர், முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குப் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு, வடமாகாணக் கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.