முல்லைத்தீவு புதைகுழியில் 13 மனித எச்சங்கள் அடையாளம்! - அகழ்வுப்பணி இடைநிறுத்தம் (PHOTOS)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த மனிதப்புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனித எச்சங்கள் அடையாளம்
இன்று காலை 10.00 மணியளவில் தொடங்கிய அகழ்வுப்பணி, மாலை 03.30 மணி வரையில் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப்பணியின் பிரகாரம் 13 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவை தடயவியல் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்களால் இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப்பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புக்களுக்கு மத்தியில் இன்று அகழ்வுப்பணி இடம்பெற்றது.
கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தைத் தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதனை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக 30.06.2023 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி (இன்று) அகழ்வுப் பணியை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் மனித எச்சங்களை அழிவடையாமல் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிஸாருக்கு நீதிபதி பணிப்புரை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video












