தேராவில் மாதிரி விவசாய பண்ணையில் திருட்டு - இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாதிரி விவசாய பண்ணையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உளுந்து திருடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையின் கீழ் உள்ள தேராவில் மாதிரி விதை உற்பத்தி பண்ணையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த விதை உளுந்து காணாமல்போயிருந்ததாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் மாதிரி விதை உற்பத்தி பண்ணையின் முகாமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த தினத்தில் கடமையிலிருந்த காவலாளிகள் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து பொலிஸாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாதிரி விதை உற்பத்தி பண்ணையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை தானியங்களும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த போதும் குறித்த விதை உற்பத்தி பண்ணைக்கு மின்விளக்குகள் பொருத்தாமை, பாதுகாப்பற்ற களஞ்சிய வசதி என பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த விதை உற்பத்தி பண்ணையில்
அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாகவே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.