உத்தியோகபூர்வ இல்லங்களில் உறவினர்களை குடியேற்றியுள்ளனரா எம்.பிக்கள்?
கோட்டே - மாதிவெல பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ குடியிருப்பில் வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ள 112 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடுகளில் தமக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் அல்லது தமக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளைக் குடியேற்றியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதிவெல குடியிருப்பில் தமக்கு கிடைத்துள்ள வீட்டை நேரில் கூட பார்க்காத நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவர்களில் அடங்குவதாக நாடாளுமன்றத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட வீட்டைத் தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கான வாடகையாக ஆயிரம் ரூபாய் அறவிடப்படுகிறது.
இதன் காரணமாகக் கொழும்பு மற்றும் அதனை அதன் புற நகர்ப் பகுதிகளில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அந்த வீடுகளை உறவினர்கள், நண்பர்கள் உட்பட வேறு நபர்களுக்கு வழங்குவதை வழமையாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை சமீட் வீடமைப்பு தொகுதியில் வீடுகளைப் பெற்றுக்கொண்டு, மாதிவல குடியிருப்பைப் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சமீட் வீடமைப்பு தொகுதியில் வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ள அமைச்சர்களில் பெயர்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் கூறியுள்ளனர்.