எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து! சபையில் காரணத்தை வெளிப்படுத்திய பிரதமர்
ஊழல்மிக்க அரசியல் கலாசாரம் காரணமாகவே மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கின்றார்கள் என்றும், அந்த நிலையை மாற்றிச் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கவே நாடாளுமன்ற ஓய்வூதிய இரத்துச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்
ஓய்வூதியச் சட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் தீர்மானம், வெறும் பிரபல்யத்திற்காகவோ அல்லது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவோ எடுக்கப்பட்ட ஒன்றல்ல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவும், அவர்களின் ஆணைக்கு மதிப்பளித்துமே இந்தச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓய்வூதியச் சட்டம், இதுவரை ஐந்து முறை திருத்தப்பட்டுள்ளது ஆனால், அந்தத் திருத்தங்கள் அனைத்தும் அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டனவே தவிர, அவற்றால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
கடந்த காலங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் வேடிக்கையானவை 1985 ஆம் ஆண்டு திருத்தத்தின்படி, தமக்கு விருப்பமான ஓய்வூதிய முறையைத் தெரிவு செய்யும் வசதி வழங்கப்பட்டது.
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் புரிந்தால், அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.
இத்தகைய சுயநலச் செயற்பாடுகளால்தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் எதிர்க்கின்றார்கள். ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் இன்று ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல இந்தச் சூழலை மாற்றியமைத்து, ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் மட்டுமே தகுதியுள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள் நாடும் முன்னேற்றமடையும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் எதிர்காலத்திலும் புதிய சட்டங்களை இயற்ற நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam