இறுதிச்சடங்கில் நடந்த மோசடி: உயிரிழந்த மகனின் உடலை இரண்டு வருடங்களுக்கு பின் பார்த்த தாய்
இங்கிலாந்தின் ஹல் நகரில் உள்ள லெகசி இறுதிச்சடங்கு நிறுவனத்தின் இயக்குனர் ரொபர்ட் புஷ், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யாமல் மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு இறந்த ஜாஸ்மின் பெவர்லியின் மகன் சன்னி என்பவரின் உடல், இறுதிச்சடங்கு முடிந்ததாகக் கூறப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரொபர்ட் புஷ், 30 க்கும் மேற்பட்ட உடல்களைச் சட்டப்பூர்வமாக அடக்கம் செய்யாமல் தடுத்தமை, 12 அறக்கட்டளைகளிடம் இருந்து பணம் திருடியமை மற்றும் போலி அஸ்தியை வழங்கியமை உள்ளிட்ட 67 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கண்டெடுக்கப்பட்ட 35 உடல்கள்
தனது மகனின் இறுதிச்சடங்கிற்குப் பிறகு வழங்கப்பட்ட அஸ்தி பெட்டியில் இருந்த சிறிய தழும்பை வைத்து, அது தனது மகனுடையது அல்ல என்பதை ஜாஸ்மின் சந்தேகித்த நிலையில், 2024ஆம் ஆண்டு பொலிஸார் நடத்திய சோதனையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.

இந்த மோசடி அம்பலமான போது ஜாஸ்மின் மீண்டும் ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் இந்த நிறுவனத்திலிருந்து 35 உடல்கள் மற்றும் 163 பேரின் அஸ்தி கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ரொபர்ட் புஷ்ஷிற்கான தண்டனை விபரங்கள் ஜூலை 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளன.