ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை 21 இற்குள் அம்பலப்படுத்துங்கள்! ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். தவறினால் இவ்விசாரணைகளை முன்னெடுக்கும் ஷானி அபேசேகர பதவியிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினம்
அவர் மேலும் கூறுகையில்,
"கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னதாகவே தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.
ஓராண்டு கடந்துள்ள நிலையிலும், அதனைச் செய்ய ஜனாதிபதியால் முடியாமல் போயுள்ளது. தற்போது உதய கம்மன்பில வெளியிட்டுள்ள புத்தகமும், அதற்கு ஆதரவாக ராஜபக்சவினருக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் அங்கு குழுமியிருப்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமாகவே தெரிகின்றது.

இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தற்போதைய அரசை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காகச் செயற்பட்டவர்.
சூத்திரதாரி யார்
தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்காக அவரும், அப்போதைய பிரதிப் பணிப்பாளரும் ஏன் பொறுப்புக்கூறக் கூடாது? இவர்களின் கீழ் நடக்கும் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் என அன்று சரத் வீரசேகரவும் விமல் வீரவன்சவும் கூறினார்கள், அதையே இன்று உதய கம்மன்பிலவும் கூறுகின்றார். இவையனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் செயல்களாகும்.

உண்மையில் சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் அம்பலப்படுத்த வேண்டும். தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்.
விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே ஷானி அபேசேகரவின் தற்போதைய நகர்வுகள் அமைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.