கோட்டாபயவின் அதிகாரம் குறைப்பு! பசிலை நீக்கும் யோசனைகள் - அமைச்சரவையில் நாளை
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிக அதிகாரங்கள்; நாடாளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் திருத்தங்கள் தொடர்பான இறுதி மீளாய்வு மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமாக ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், உத்தேச திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 19 ஆவது திருத்தத்தின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் முன்மொழிகளை உள்ளடக்கியுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று அதன் பின்னர் கூடிய விரைவில், அதனை நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அர்த்தமுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் கொள்வனவு மற்றும் தணிக்கை ஆணைக்குழுக்களை மீள அறிமுகப்படுத்துதல் ஆகியவை முன்மொழியப்பட்ட திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும்.
மத்திய வங்கி ஆளுநரை தெரிவு செய்வது அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும்.
திருத்தங்களின் அடிப்படையில், இலங்கையின் குடிமகனாக இல்லாத அல்லது இலங்கையின் குடிமகனாக இருக்கும் போது மற்றும் ஒரு நாட்டின் குடிமகன் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி பெறமாட்டார்.
அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர்,இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.
இந்த பேரவைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள், தேர்தல், பொது சேவை, தேசிய பொலிஸ், கணக்காய்வு சேவை, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழுக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுக்களாக அமையும்.
அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிகள், ஆலோசனை சேவைகள் போன்றவை, கொள்முதல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட 21வது திருத்தச் சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி, ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
அதில் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆகவும், அமைச்சரவை அல்லாத மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை 25 ஆகவும் மட்டுப்படுத்தும் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.