நினைவுத் தூபி பேரினவாத அழுத்தங்களால் அகற்றப்பட்டுள்ளது:கோவிந்தன் கருணாகரம்
வட கிழக்கில் ஒன்றிணைந்து எமது கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழினம் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் நம் இனம், அகிம்சை ,ஆயுத, இராஜதந்திரப் போராட்டங்கள் மூலமாக எமது உரிமையைப் பெறுவதற்காக போராடி வருகின்றோம்.
எமது ஆயுதப் போராட்டம் 2009 இல் மௌனிக்கப்பட்ட போது இலட்சக்கணக்கான பொது மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டார்கள்.இவர்களை நினைவு கூருமுகமாக நாம் ஒவ்வொரு வருடமும் நினைவு நிகழ்வுகளை நடத்திக் கொண்டும் வருகிறோம்.
இந்நினைவு கூரல்களுக்காக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்திலும் ஒரு நினைவுத் தூபி அமைக்கப்பட்டு நீனைவுகூரப்பட்டு வந்தது. இந்த நினைவுத் தூபி பேரினவாத அழுத்தங்களால் பல்கலைக்கழக நிருவாகத்தினால் அகற்றப்பட்டுள்ளது.
இந்தப் பேரினவாத அரசு தமிழ் மக்களை மாத்திரமல்ல அவர்களுடைய நினைவுகளையும் அழிப்பதற்காக கங்கணம் கட்டி நிற்கின்றது. ஒவ்வொரு தடவைகளிலும் அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனைக் காண்பித்தே வருகிறார்கள். இது அது போன்றதொரு சந்தர்ப்பமே.
தமிழர்களின் உறுதி வெறுமையானதல்ல என்ற உறுதியின் ஒற்றுமையினை நாம் அனைவரும் தொடர்ச்சியாகக் காண்பித்தேயாக வேண்டிய காலம் உருவாக்கப்படுகிறது. உருவாகிவிட்டது. இதிலிருந்து மீட்சி பெறுவதற்காக நாம் தயாராக வேண்டும்.
எனவே, நாம்அனைவரும் வட கிழக்கில் ஒன்றிணைந்து நளை 11ம் திகதி எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.