உலகளாவிய பௌத்த உச்சி மாநாடு: 30 நாடுகளைச் சேர்ந்த பிக்குகள் பங்கேற்பு!
இந்தியாவில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள உலகளாவிய பௌத்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாளை மறுதினம் (20.04.2023) நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தலாய் லாமாவும் பங்கேற்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் இன்னும் அவரின் வருகை உறுதிசெய்யப்படவில்லை என்றும் இந்திய மத்திய கலாசார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த புத்த பிக்குகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தின் பிறப்பிடமான இந்தியா
மேலும், கலாசார அமைச்சு மற்றும் சர்வதேச பௌத்த கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து 150 பிரதிநிதிகளும், வெளிநாட்டிலிருந்து 171 பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சி மாநாட்டின் கருப்பொருள் 'இன்றைய உலகின் மிக அழுத்தமான சவால்களுக்குப் பௌத்த பதில்' என்று குறிப்பிட்ட அமைச்சர், 'பௌத்த மதத்தின் பிறப்பிடமான இந்தியா இந்த மாநாட்டைக் கூட்டும் பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி (G Kishan Reddy) தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் திபெத்தில் இருந்து துறவிகள் கலந்து கொள்வார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அவர்களின் பதில்கள் இன்னும் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பேச்சாளர்கள்
இந்த உச்சி மாநாடு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை, வியட்நாம், அமெரிக்கா, லாவோஸ், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், கலாசார அமைச்சின் அறிக்கையின்படி, இந்த உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து வரும் முக்கிய பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் பங்கேற்கின்றனர்.
2020இல் பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்கப் பௌத்த அறிஞரான பேராசிரியர் ரொபர்ட்
தர்மன் மற்றும் வியட்நாம் பௌத்த சங்கத்தின் துணைத் தலைவரான திச் ட்ரை குவாங்
ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.