மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்
கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
கலேவெல பகுதியில் வைத்து மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நான்காவது சந்தேகநபர் கிரிவுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை - கமன்கெதர பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், தந்தை மற்றும் அவரின் மகன்கள் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
மூவர் கொடூரமாக படுகொலை
இந்தச் சம்பவத்தில் 51 வயதான தந்தையும், 23 மற்றும் 24 வயதுடைய மகன்கள் இருவரும் உயிரிழந்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கம்பஹா - படல்கம பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் இரு குடும்பங்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டம் பறக்கவிட்டுக் கடந்த 2017ஆம் ஆண்டு உருவான பிரச்சினை இதுவரை நீடிக்கின்றது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற முக்கொலையுடன் இதுவரை 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் ஏற்கனவே இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள்
தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியிலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்
என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.