மீண்டும் இலங்கையை சூழும் அலை வடிவக் காற்று.. தயார் நிலையில் அதிகாரிகள்
நாளை (29) முதல் இலங்கையை சூழ நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலையை எதிர்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கான மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தயார்நிலையில் இருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
முன்கூட்டிய நடவடிக்கைகள்
மேலும், இதனைக் கருத்திற்கொண்டு, கடற்படை வீரர்கள், உலங்கு வானூர்திகள், மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் கொட்டுவேகொட இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அவர், எதிர்பார்க்கப்படும் இந்த வானிலை மாற்றத்தின் போது, வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையைக் காட்டிலும் சீரற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
அதன்படி ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி, அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.