கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி முறை
பாதுக்க, போபே இராஜசிங்க மகா வித்தியாலய மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய நாடாளுமன்ற சபாபீடத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் 'விஷன்' நிகழ்ச்சித் தொடருடன் இணைந்ததாக போபே இராஜசிங்க கல்லூரி இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதற்கு பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
இதன்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
செயற்திறன்மிக்க பிரஜைகள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ''ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்க வேண்டும்.
அத்துடன் செயற்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள கல்வி முறையை படிப்படியாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்துள்ளார்.




