கொழும்பில் அமைச்சர்களுக்கு இரண்டு முதல் மூன்று வீடுகள்
அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடல் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களின் பின்னர் கொழும்பில் அமைச்சர்களில் 13 வீடுகளை தாக்கி சேதப்படுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் விசாரணைகள் மேல் மாகாண தெற்கு பிராந்திய பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், விசாரணைகளை தெற்கு பிராந்திய பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நுகேகொடை மற்றும் கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுகளில் சேதமடைந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சேதமாக்கப்பட்ட மு்னனாள் அமைச்சர்கள் வீடுகள்
காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவங்ச, ரோஹித்த அபேகுணவர்தன, ஜயந்த கெட்டகொட, கீதா குமாரசிங்க, சீதா அரம்பேபொல, ஜகத் குமார ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களில் சிலருக்கு இரண்டு முதல் மூன்று வீடுகள் இருந்துள்ளதுடன் அவையும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை நடத்த சில சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இந்த குழுக்கள் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 9 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டதுடன் தீயிடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.