முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை
சர்வகட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ச மற்றும் பவித்ரா வன்னியாரச்சி போன்றவர்கள் உட்பட இன்னும் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே மேற்படி பரிந்துரையை பொதுஜன முன்னணி முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அமைக்கப்படும் சர்வகட்சி அரசின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அமைச்சரவை தொடர்பான விசேட சந்திப்புகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 10 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த நாட்களில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் பிரதமருக்கும், பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.