தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை: அமைச்சர் சந்திரசேகர் ஆதங்கம்
இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர், என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்துமீறும் செயற்பாடு
தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் 12.02.2025 அன்று ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர்.
இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது. எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது.
தமிழக தலைவர்கள்
எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை. தமிழக கடற்றொழிலாளர்கள் மீதோ, தமிழக தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை.
ஒரு சில கடற்றொழிலாளர்கள் தான் றோலர் படகுகளையும், தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றனர்.அதனையே நாம் எதிர்க்கின்றோம். எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்யவேண்டிய தேவைப்பாடு எழாது.
எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என போராடும் தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லைத்தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் ஏழாது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)