எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது! ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் - அமைச்சர் நளிந்த
எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகரில் நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபால் அலுவலகம் இன்றைய தினம் (25.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சேவையை சிறப்பாக வழங்கும் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வளவு காலமும் பழைய கட்டடத்தில் இருந்து கொண்டு, எமது அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் அனைவரும் அனைத்துக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு, சகித்துக் கொண்டு மக்களுக்குச் சேவை வழங்கி வந்தீர்கள்.
இப்போது உங்களால் அச்சேவையை முன்னரை விடச் சிறப்பாக வழங்க முடியும். அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவெனில், திறைசேரியின் பணத்தை உங்களுக்காகச் செலவிடுவது, உங்களுக்குச் சுலபமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காகவே ஆகும். ஒருபுறம் எமது வரிப் பணத்தைச் செலவிட்டு உங்களுக்கு வலிமையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகிறோம்; மறுபுறம் எமது வரிப் பணத்தைச் செலவிட்டு உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குகிறோம்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அஞ்சல் சேவை, பொலிஸ் உள்ளிட்ட மக்கள் சேவைகளை உங்களுக்கு முடிந்தவரை அதிகபட்சக் திறமையுடன் வழங்கும்போது, உங்களால் இந்தப் பொருளாதாரச் செயற்பாட்டில் பங்காளியாக முடியும் என்றார்.

எமது முதன்மை வைத்தியசாலைகளுக்கு தேவையான விசேட வைத்தியர்களை வழங்குவதில் அதாவது அறுவைச் சிகிச்சை செய்வதற்குத் தேவையான அறுவைச்சிகிச்சை விசேட வைத்தியர்கள் மற்றும் மகப்பேறு விசேட வைத்தியர்கள் சில இடங்களில் இருந்தாலும், அவர்கள் அறுவைச்சிகிச்சை செய்வதற்குத் தேவையான விசேட மயக்கவியல் வைத்தியர்கள் இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்
கடந்த 2022, 2023, 2024 காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன், அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் மயக்கவியல் விசேட வைத்தியர்களே ஆவர். அதனால் எமது சில வைத்தியசாலைகளில், ஒரு மயக்கவியல் விசேட வைத்தியர் பல வைத்தியசாலைகளை உள்ளடக்கிப் பணியாற்றி வருகின்றார்.
ஆனால் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்குச் சென்ற எமது விசேட வைத்தியர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் இலங்கைக்குத் திரும்பி வந்து, இந்த வைத்தியசாலைகளில் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, எம்மால் படிப்படியாக இந்த வைத்தியசாலைகளுக்கும் அந்த விசேட மருத்துவச் சேவைகளை வழங்க முடியும்.
எப்படியிருப்பினும், நான் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரமளவில் இம்மாவட்டத்திற்கு வருகை தந்து, எமது மக்கள் பிரதிநிதிகள், சுகாதாரத் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் எமது பிரதேச நிர்வாகத்தைச் சார்ந்த அரச அதிகாரிகளை ஒன்றிணைத்து, இந்தப் பிரதேச மட்டத்திலான வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன்.
எமது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக 45,000 மில்லியன் ரூபாய் முதன்மைச் சுகாதார மேம்பாட்டிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நிதி.
சுகாதார மையங்களை மேம்படுத்தல்
அந்த நிதியை எவ்வாறு உங்களது கிராம மட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் அல்லது எமது முதன்மைச் சுகாதார மையங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துவது என்பது குறித்துத் தீர்க்கமான இறுதித் திட்டத்திற்கு வர எதிர்பார்க்கின்றேன். ஏனெனில் அதன்படியே அடுத்த இரு ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

நாடு பூராகவும் பரந்துள்ள சுமார் 3,500 உப அஞ்சலகங்கள், சுமார் 600 அஞ்சலகங்கள் என மொத்தமாகச் சேர்த்தால், சுமார் 4,100 அஞ்சலகங்கள் மூலம் எமது சேவைகளை வழங்கி வருகிறோம். கிராமத்திற்கு அஞ்சல் சேவை அத்தியாவசியமானது. முத்திரை குத்துவதற்கு மட்டும் அல்ல, கடிதங்கள் மற்றும் பொதிகளை அஞ்சல் செய்வதற்கு மட்டும் அல்ல எமது பல கொடுப்பனவுகள், அரசின் கொடுப்பனவுகள் அஞ்சலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.
அதேபோல உங்களுக்குச் சுலபமாக உங்களின் சில செலுத்துகைகளை மேற்கொள்வதற்கும் அஞ்சலகங்களைப் பயன்படுத்த முடியும். நாம் இந்த நாட்களில் இந்த அஞ்சலகங்களுக்கு கணினி வசதிகளை வழங்குவதற்கான பணிகளைச் செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan