அம்பாறையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு - பல கோணங்களில் பொலிஸார் விசாரணை
அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணை
மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பரவியதை தொடர்ந்து சம்பவம் குறித்து பல கோணங்களில் பொலிஸாரும், அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச்சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.
உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு
அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக் கண்டறிவதற்காக சடலத்தின் சில உயிரியல் அவயங்கள் கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம் கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பிள்ளையின் தாய் மரணம்
இதேவேளை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாய் வியாழக்கிழமை (23) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் மரணத்திற்கான பின்னணி குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.