மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆதரவு வழங்கப்படும்: அமெரிக்காவின் விசேட பிரதிநிதி உறுதி (Photos)
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று அமெரிக்காவின் விசேட பிரதிநிதி டிசைரீ கோர்மியர் ஸ்மித் உறுதியளித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று (12.12.2023) நுவரெலியா மாவட்டத்துக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழி பயிற்சி
மேலும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதியிடம் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மலையக மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பிவரும் சர்வதேச சமூகத்துக்கு நன்றிகளையும் கூறியுள்ளார்.
அத்துடன், மலையக பெருந்தோட்ட தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், மலையக மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் பற்றி அமைச்சரிடம், அமெரிக்க பிரதிநிதி கேட்டறிந்துகொண்டதோடு அமைச்சின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் கருத்துகளை அறிந்துகொண்டுள்ளார்.
அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அமெரிக்க தூதரகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆங்கில மொழி பயிற்சி நடவடிக்கையை விரிவுபடுத்துவது சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





