வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
வவுனியாவில் கோவிட் தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில், யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டிய நிலையில் விசேட சந்திப்பொன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற இவ்விசேட சந்திப்பில் பி.சி.ஆர் இயந்திரத்தின் தேவை மற்றும் அதனை இயக்குவதற்கு உரிய ஆளணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது அவ் இயந்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
கலந்துரையாடல் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
அத்துடன் வவுனியாவில் சுகாதாரத் துறையினரின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை கப்பல் எரிந்தமையினால் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது,
பாணந்துறை முதல் வடக்கு நோக்கி மா ஓயா வரை பாதிப்பு இருந்தது. அது இயல்பாகவே வெகு விரைவில் அற்றுப்போய்விடும்.
அவர்களுக்கு முதற்கட்டமாக 5000 ரூபா வழங்கப்படுகின்றது. மேலும் பாதுகாப்புக்களைப் பார்த்து உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சுகாதார சேவை மற்றும் ஏனைய துறைசார் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.




