இலங்கையின் முதன்மை துறைமுகம் மீளெழுச்சி பெறும்! அமைச்சர் உறுதி (Photo)
இலங்கையின் வரலாற்றுத்துவம் பெற்றதும், வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாகவும் மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் உருவாக்கி தரப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றையதினம் இராஜாங்க அமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் முதன்மையான துறைமுகமான இந்த துறைமுகம் இலங்கையின் மீன்பிடித் துறையில் மூன்றில் ஒரு பங்கை வகித்திருந்தது. ஆனாலும் கடந்த காலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை அழிவு யுத்தம் காரணமாக துரதிஸ்டவசமாக அதில் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
ஆனாலும் அந்த பாதிப்பிலிருந்து இந்த துறைமுகத்தை தூக்கி நிறுத்தும் முகமாகவே அதன் அபிவிருத்திக்கான இரண்டாம் கட்டட பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
இதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் விசேடமாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
மேலும் இந்த மயிலிட்டி துறைமுதுகத்தை மட்டுமல்லாது வடக்கில் மேலும் பருத்தித்துறை துறைமுகம், மன்னார் பேசலை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகம் ஆகிய மூன்று துறைமுகங்களையும் அமைப்பது தொடர்பிலும் முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துறைமுகங்களையும் இந்த அரசாங்கத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.
மேலும் கடந்தகாலத்தில் பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டும் இருந்தன. ஆனாலும் அம்முயற்சி சரியாக கையாளப்படாமையால் அது கைவிடப்பட்டவிட்டது.
ஆனால் நாம் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் அந்த துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பான முயற்சியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றோம்.
அது விரைவில் கைகூடும் எனவும் நம்புகிறேன். அதேநேரம் இந்த மயிலிட்டி துறைமுகத்தின் முதலாம் கட்ட ஆபிவிருத்தி பணிகளின்போது பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என கடற்றொழிலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இதேநேரம் குறித்த துறைமுகத்தை கட்டும்போது அப்பிரதேசத்தின் கடற்றொழில் அமைப்புக்களுடன் கலந்துரையாடித்தான் அமைப்பது வழமை. அதேபோன்றே இங்குள்ள கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடி முதலாவது கட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எமது அரசாங்கத்தால் அதன் இரண்டாம் கட்ட பணிகள் முன்றாம் கட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது கடந்தகாலத்தில் விடப்பட்ட அனைத்து குறைபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நவீனத்துவத்துடன் கூடியதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதிபடக் கூறுகின்றேன்.
இதேவேளை எமது கடற்றொழிலாளர்கள் பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கடந்தகாலத்தில் நாட்டில் நடைபெற்ற வன்முறை காரணமாக பலமான பொருளாதார கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாது கடந்தகால தமிழ் தலைவர்கள் என கூறப்பட்டவர்களால் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தாது தவறவிட்டப்பட்டதால் அதிக துன்பங்களையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.
அந்தவகையில் அவற்றை தீர்க்கும் முகமாகவே எமது நிகழ்கால எதிர்கால செயற்பாடுகள் அமையும். இதேவேளை இந்த மயிலிட்டி பிரதேசத்தில் தற்போது 60 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் சுமார் 100 முதல் 125 ஏக்கர் நிலங்களை விரைவில் கட்டம் கட்டமாக விடுவிக்கவும் நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அந்தவகையில் எமது மக்கள் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதுடன் இந்த வரலாற்று மிக்க துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் பொருளாதார ஈட்டலுக்கான வழங்களுடன் செயற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.




செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri