கறுப்புக் கொடிப் போராட்டம் பிரிவினைவாதம் அல்ல! அமைச்சர் அபயரத்ன விளக்கம்
இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாதாக கூறப்படுகிறது.
இதனை காரணமாக வைத்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிரான அமைப்புகள் இது தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் இலாபம் தேட முயற்சி
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கறுப்புக் கொடிப் போராட்டங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமே தவிர, அவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது பிரிவினைவாதத்தின் மீள் எழுச்சியாகவோ கருதப்பட வேண்டியதில்லை.

இத்தகைய போராட்டங்களை மிகைப்படுத்தி அரசியலாக்குவது தேவையற்ற செயலாகும். மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது அரசின் நோக்கமல்ல. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேவையான எல்லை நிர்ணயப் பிரச்சினைகள், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றைச் சீர்செய்வதில் அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
முறையான சீர்திருத்தங்கள் இன்றி தேர்தலை நடத்துவது மேலதிக குழப்பங்களையே ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிரான அமைப்புகளும் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன.
பிரிவினைவாதத்தைக் காரணமாகக் காட்டித் தேர்தல் கோருவது ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் அல்ல. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு எப்போதும் விழிப்புடன் உள்ளது என்றார்.