வெளிநாடொன்றில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்! பயணிகள் கடும் அசௌகரியம்
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தில் (JKIA), விமானப் போக்குவரத்து ஊழியர்கள் இன்று (16) அதிகாலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆபிரிக்காவின் முக்கியமான போக்குவரத்து மையங்களில் ஒன்றான இந்த விமான நிலையத்தில், சுமார் நான்கு மணி நேரம் வரை விமானங்கள் தாமதமாகியுள்ளன.
நீண்ட நேர காத்திருப்பு
சில பயணிகள் விமானங்களுக்குள் அமரவைக்கப்பட்ட நிலையில், விமானம் புறப்படுவதற்கான சமிக்ஞை (Clearance) கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, கென்யா எயார்வேஸ் (Kenya Airways) தனது பயணிகளுக்கு கால அட்டவணை மாற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், விமான நிலையத்திற்கு வரும் முன் பயண நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
சம்பளம் உயர்வு மற்றும் மோசமான பணிச்சூழல் தொடர்பாக கென்யா விமானப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (KAWU) கடந்த வாரம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.
வேலைநிறுத்தம்
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் தொழிலாளர் விவகாரங்களுக்குத் தீர்வுகாண சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (KCAA) மறுப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும், இந்த வேலைநிறுத்தத்திற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலும், ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது விமான நிலைய நிர்வாகம் நிலைமையைச் சீர்செய்ய 'தற்செயல் திட்டங்களை' (Contingency plans) நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், கிசுமு (Kisumu) போன்ற பிற நகரங்களிலும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.