மிஹிந்தலை விகாரையின் பாதுகாப்பு அதிகாரிகளை விலக்க தீர்மானம்! பொலிஸார் மறுப்பு
இராணுவ பிரசன்னம் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என பிரதம பௌத்த பிக்கு கருதினால் வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையின் பாதுகாப்பு அதிகாரிகளை விலக்கிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அடையாளம் தெரியாத இருவர் சிவிலில் பிரசன்னமாகியிருப்பதன் காரணமாக, விகாரையின் பிரதம குருவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியபோதே இராஜாங்க அமைச்சர் தமது பதிலை வழங்கியுள்ளார்.
எனினும் சிவில் ஆடையில் உள்ள இரண்டு பேரும் இராணுவ வீரர்களே என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு நிலைமையை மதிப்பிட்டு விகாரையின் பாதுகாப்பையும், சுற்றுலாப் பயணிகளையும் உறுதி செய்வதற்காக அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ வீரர்களின் இருப்பு
இந்த நிலையில் விகாரையின் வளாகத்தில் இருக்கும் அனைத்து இராணுவ வீரர்களின் இருப்பு,பிரதம குருவுக்கு அச்சுறுத்தலாக இருக்குமாக இருந்தால், அவர்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இருந்து இராணுவத்தினர் திரும்பப்பெறப்பட்ட நிலையில், அந்த இடங்களுக்கு பொலிஸார் கடமைகளைத் தொடர்வார்கள், எனினும் அவர்களும் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளது.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை நீக்கும் தீர்மானத்தின் கீழ், நீண்ட காலமாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளும் மீளப் பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எவ்வாறாயினும், மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரச்சுறுத்தல்
முன்னதாக, மிஹிந்தலை விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 200 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்பில் விகாரையின் பிரதமகுரு உயிரச்சுறுத்தல் அச்சத்தை வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இராணுவத்தினர் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்தார்.
முன்னதாக, படையினருடன் செயற்படும் இரண்டு சாதாரண பிரஜைகள், தமது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விகாரையின் பிரதம குரு தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முறையிட்டிருந்தார்.
எனினும் அந்த இருவரும் இராணுவத்தினரே என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
