மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான ஆய்வு : திருப்பி அனுப்பப்பட்ட அதிகாரிகள்
மன்னார் (Mannar) கொன்னையன் குடியிருப்பு பகுதியில் கடந்த இரண்டு தடவைகள் கணிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்றைய தினமும் (19) ஆய்வு அறிக்கையை வழங்க வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (19) காலை சுமார் 9.30 மணியளவில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டம் கட்டமாக வருகை தந்தனர்.
பொலிஸார் பாதுகாப்பு கடமை
இதன்போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற நோக்கத்துடன் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர்.
அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், குறித்த பகுதிக்கு கள விஜயத்தை அதிகாரிகள் மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.
இதன்போது பொது அமைப்புகளின் தலைவர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் உள்ளடங்களாக கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






