மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கைக்குப் பாரிய சவால்! ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றமானது இலங்கை போன்ற ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெஹிவளை - கல்கிஸை மாநகர சபை உறுப்பினர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
எரிபொருள் விநியோகம்
அவர் மேலும் தெரிவித்ததாவது,"மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் இலங்கையின் எரிபொருள் விநியோகம், மின்சாரம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் இவ்வாறான நெருக்கடிகள் எழும் போது, அதனை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.
தற்போதைய அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றது. உலகளாவிய நெருக்கடியைச் சாட்டாகக் கூறி தனது இயலாமையை மறைக்க முற்படக்கூடாது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதால், உள்நாட்டில் எரிபொருள் விலையை மேலும் உயர்த்த வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதனை ஈடுகட்ட டீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்ஷவின் சிகை அலங்கார பெண் உட்பட ராஜபக்சர்களின் நெருங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள்!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்
இவ்வாறான தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய எரிசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி இதுவரை எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கின்றது.

எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியானது அடுத்ததாக உர நெருக்கடிக்கு வழிவகுக்கும். உரங்களின் விலை அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, இறுதியில் நாட்டில் பாரிய ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இத்தகைய நெருக்கடிகளைத் தீர்க்க அனைத்து அரசியல் கட்சிகளையும் துறைசார் நிபுணர்களையும் அழைத்து முறையானதொரு தேசிய வேலைத்திட்டத்தை அரசு உடனடியாகத் தயாரிக்க வேண்டும்.
புலனாய்வுத் திணைக்களம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் அமைய வேண்டும்.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய அரசுடன் நெருக்கமான ஏனையோர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, தற்போதைய சுகாதார அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்தத் தாக்குதல் குறித்து வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.