அரசின் உயர் அதிகாரிகளின் சொத்து விபரம் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்!
புதிய இணைப்பு
ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்படி, பொதுப் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளைப் பொதுமக்கள் அணுக அனுமதிக்கப்படுவார்கள் என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, "2023ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டம் எண் 09, நமது நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த சட்டமாகும்.
அச்சட்டத்தின் 86 மற்றும் 88ஆம் பிரிவுகளின்படி, நமது நாட்டின் அனைத்து உயர் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் தங்களது தகவல்களைச் சேர்க்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
அதன்படி, அச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி முதல் கீழ் மட்டம் வரையிலான சுமார் 300 பேர், இந்தத் தகவல்கள் அனைத்தையும் தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளில் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இது அச்சிட்ட வடிவில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. பின்னர், இதை இணையவழியில் வழங்கும் முறையை வழங்குவதற்காகச் சட்டம் திருத்தப்பட்டது” என குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இலங்கையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை மூத்த அரச அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சொத்து அறிவிப்புக் கட்டமைப்பில் மாற்றங்களைப் பரிந்துரைத்து, 2026 ஜூலை 24ஆம் திகதி அன்று அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு வரைவுத் திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியின்படி, இந்தச் சட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 1,60,000 சொத்து அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதைக் கருத்தில் கொண்ட பின்னரே, முன்மொழியப்பட்ட திருத்தம் ஆரம்பத்தில் வகுக்கப்பட்டது.
தனியார் துறையினரின் கோரிக்கைகள்
மேலும், அரச சபைகளில் பணியாற்றும் பல தனியார் துறை வல்லுநர்களும் கவலைகளை எழுப்பியுள்ளனர். அவர்கள், தங்களது அறிவிப்புகளைக் கட்டாயமாகப் பொதுவெளியில் வெளியிடுவது தங்களது தனியுரிமையை மீறக்கூடும் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, அந்தக் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசியல் சாராத நபர்களின் தனியுரிமை குறித்த கவலைகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்குக் கிடைக்கப்பெறும் வகையில் அந்த முன்மொழிவைத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொதுப் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வு செய்வதற்கான பொதுமக்களின் உரிமையை இந்த மாற்றங்கள் பாதுகாக்கும் அதே வேளையில், சட்டத்தின் கீழ் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய பிற பிரிவுகளுக்கு ஒரு மாறுபட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து திருத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.