மறைந்த மாவை சேனாதிராஜா தொடர்பாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு

Mavai Senathirajah Sri Lanka Politician
By Erimalai Jan 31, 2025 07:00 PM GMT
Report

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு சரிந்து வீழ்ந்தது என்று மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) அமரத்துவம் தொடர்பாக தொடர்பாக அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு வெளியிட்டுள்ளார்.

 அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவரும் மாவை அண்ணன் என இளைஞர்களினால் அன்புடன் அழைக்கப்படுகின்றவருமான மாவை சேனாதிராஜா கடந்த புதனன்று இரவு 10 மணியளவில் காலமானார்.

சுமார் 62 வருடம் தமிழ்த் தேசிய அரசியல் வாழ்க்கையை வாழ்ந்த அவர் தனது 82 ஆவது வயதில் காலமாகியிருக்கின்றார்.

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

ஆயுதப் போராட்டம்

ஜனநாயகப் போராட்ட காலம், ஆயுதப் போராட்ட காலம், மீண்டும் ஜனநாயகப் போராட்ட காலம் என மூன்று காலகட்டங்களில் வாழ்ந்தவர். அவரது அரசியல் வாழ்வில் நீண்ட காலம் ஆயுதப் போராட்ட காலமாகவே இருந்தது.

ஆயுதப் போராட்ட இயக்கங்களில் அவர் இணையாவிட்டாலும் அதன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1942 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 27ஆம் திகதி பிறந்த அவர் தனது 19வயதில் 1961ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளில் இறங்கினார். 1961ஆம் ஆண்டு சிங்கள மொழித் திணிப்புக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம் வடக்கு - கிழக்கு கச்சேரிகளின் முன்னாள் இடம்பெற்றது.

மறைந்த மாவை சேனாதிராஜா தொடர்பாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு | Memoir Of Political Analyst Yothilingam On Mavai

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முதல் நாள் காங்கேசன் துறைத் தொகுதி மக்கள் தந்தை செல்வா தலைமையில் பங்குபற்றினார்,.இதன் போது 19வயது இளைஞனான மாவையும் தந்தை செல்வாவுடன் இணைந்து பங்கு பற்றினார்.

ஒரு மாதமாக நீடித்த சத்தியாக்கிரகப் போராட்டம் மிகக் கொடூரமாக நசுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி நடாத்திய போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் இச்சத்தியாகிரகப் போராட்டமேயாகும். சத்தியாக்கிரகப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டதை நேரில் பார்த்த மாவை அண்ணன் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது எனத் தீர்மானித்தார்.

1962ஆம் ஆண்டு மாவை அண்ணன் தமிழரசு வாலிப முன்னணியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றது. இதில் அதிர்ச்சியுற்ற தமிழ் இளைஞர்கள் அரசியல் கட்சிசாராத இளைஞர் இயக்கத்தை உருவாக்க முனைந்தனர். இதனடிப்படையில் 1968ம் ஆண்டு ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம் உருவாக்கப்பட்டது.

இலங்கைத் தேசிய மன்னன் இவ் இயக்கத்தின் தலைவராகவும், மாவை சேனாதிராஜா செயலாளராகவும், மைக்கல் தம்பிநாயகம் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். பரமசாமி, வில்வராஜா, டாக்டர் சண்முகநாதன், முத்துக்குமாரசுவாமி, உரும்பிராய் சிவகுமாரன், உரும்பிராய் மகாஉத்தமன் ஆகியோர் இவ்வமைப்பில் முக்கிய உறுப்பினர்களாக விளங்கினர். இவ்வமைப்பு இரண்டு தீர்மானங்களை முக்கியமாக எடுத்திருந்தது.

ஒன்று இதுவரை காலமும் முன்னெடுத்த சமஸ்டிக் கோரிக்கையை விட்டு தனி நாட்டுக் கோரிக்கையை முன்னெடுப்பதாகும் இரண்டாவது தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாகும்.

இவ்வமைப்பு “சியவச" சுவீப் டிக்கெட்டுக்கு எதிரான போராட்டம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை திருகோணமலையில் அமைப்பதற்கான போராட்டம் என்கின்ற முக்கிய போராட்டங்களை நடாத்தியது.

தமிழ்ப் பகுதிகளில் சிங்களப் பாடசாலைகளை அமைப்பது தொடர்பாகவும், லக்சல, சலுசல, போன்ற சிங்கள பெயர்களை தமிழ்ப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் பலத்த எதிர்ப்புக் குரலை எழுப்பியிருந்தது.

மாவை சேனாதிராஜாவிற்கு முல்லைத்தீவில் அஞ்சலி

மாவை சேனாதிராஜாவிற்கு முல்லைத்தீவில் அஞ்சலி

தமிழரசுக் கட்சி

தமிழர் அரசியலில் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட முதலாவது இளைஞர் இயக்கம் இது தான். 1970ஆம் ஆண்டு தேர்தல் வந்த போது இவ்வமைப்பும் சிதைவடைந்தது. மாவை அண்ணன் உட்பட பலர் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டனர்.

இளைஞர் இயக்கத்தில் இணைந்த போதும் மாவை அண்ணரால் தமிழரசுக் கட்சியையும் நிராகரிக்க முடியவில்லை. இளைஞர் அமைப்புகளையும் நிராகரிக்க முடியவில்லை. தலைவர் அமிர்தலிங்கத்துடனும் தந்தை செல்வாவுடனும் மிகவும் அன்பு கொண்டவராக விளங்கினார்.

மறைந்த மாவை சேனாதிராஜா தொடர்பாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு | Memoir Of Political Analyst Yothilingam On Mavai

1970 ஆம் ஆண்டு தேர்தலில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்த போது கண்ணீர் விட்டு அழுதார். 1968ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் “கித்துள் ஊற்று" என்ற இடத்தில் ஒரு சிறு குளம் கட்டப்பட்டு அதில் சிங்களக் குடியேற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழரசுக் கட்சி தமிழரசு வாலிப முன்னணியைச் சேர்ந்தவர்களை அத்துமீறிக் குடியேற்ற வைத்தது. மாவை அண்ணரும் இக்குடியேற்ற செயற்பாட்டில் முன்னணி வகித்தார்.

அப்பகுதியின் சிங்கள உதவி அரசாங்க அதிபர் அந்த இளைஞர்களின் குடிசைகளுக்கு தீ வைத்ததோடு இளைஞர்களையும் கைது செய்தார்.தமிழரசுக் கட்சி காணி அமைச்சருடன் வாதிட்டு குடியேறிய இளைஞர்கள் உட்பட தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் குடியேற்றியது.

1970ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் மொழி வாரித் தரப்படுத்தல் முறையை சிறிமா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இதன்படி பல்கலைக்கழக விஞ்ஞான பீடங்களில் மாணவர்களைச் சேர்க்கும்போது தமிழ் மொழி மூல மாணவர்கள் கூடிய புள்ளிகளையும், சிங்கள மொழி மூல மாணவர்கள் குறைந்த புள்ளிகளையும் எடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டது.

இந்தக் கொடூரமான முறையை எதிர்ப்பதற்காக 1970ம் ஆண்டு கார்த்திகையில் தமிழ் மாணவர் பேரவை உருவாக்கப்பட்டது. உரும்பிராய் சிவகுமாரன் உரும்பிராய் சத்தியசீலன், திருநெல்வேலி முத்துக்குமாரசுவாமி, ஏழாலை அரியரத்தினம் தமிழ் மாணவர் பேரவை மத்திய குழுவில் முக்கிய உறுப்பினர்களாக விளங்கினார்.

மாவை அண்ணன் மத்திய குழுவில் அங்கம் வகிக்காவிட்டாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.மாவையின் தம்பி தங்கராசா தமிழ் மாணவர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளாராக விளங்கினார்.தமிழ் மாணவர் பேரவையே முதன் முதலாக ஆயுதப் போராட்டத்தை தொடக்கி வைத்தது.

1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தமிழ் மாணவர் பேரவை நடாத்தியது. தொடர்ந்து 1970ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி மட்டக்களப்பிலும் தமிழ் மாணவர் பேரவையினால் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்தப்பட்டது.

1972 மே 22 குடியரசு தினத்திலும் தமிழ் மாணவர் பேரவை வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

சிறிது காலத்திலேயே தமிழ் மாணவர் பேரவை வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதால் தமிழ் மாணவர் பேரவை தலை மறைவு இயக்கமாக செயற்பட வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் வெளிப்படையாகச் செயற்படுவதற்கு இளைஞர் அரசியல் இயக்கம் ஒன்று தேவைப்பட்டதால் 1973ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது.

மயிலிட்டி புஸ்பராஜா அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பிரான்சிஸ், பத்மநாபா, தவராசா, வரதராஜப் பெருமாள், போல் பிள்ளை ஆகியோர் செயற்குழுவில் முக்கிய உறுப்பினர்களாக விளங்கினர்.

தமிழ் இளைஞர் பேரவை அங்குரார்ப்பண கூட்டத்தில் மாவை அண்ணரும் பங்கு பற்றினார். தமிழ் இளைஞர் பேரவை" என்ற பெயரை அவரே சிபாரிசு செய்திருந்தார்.

வைத்திய நிபுணர் தொடர்பில் ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

வைத்திய நிபுணர் தொடர்பில் ஜனாதிபதியிடம் சிறீதரன் முன்வைத்த கோரிக்கை

கைது 

1973 பங்குனி 9ஆம் திகதி தமிழ் மாணவர் பேரவையுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மாவை அண்ணரும் கைது செய்யப்பட்டார். கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட சி.ஐ.டி.யினரே கைது செய்தனர். இவருடன் த.முத்துக்குமாரசுவாமி நித்தியானந்தன், சந்திரகுமார், சூரியகுமார் உட்பட 42 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறைந்த மாவை சேனாதிராஜா தொடர்பாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு | Memoir Of Political Analyst Yothilingam On Mavai

உரும்பிராய் சிவகுமாரன் தலைமறைவானதால் கைது செய்ய முடியவில்லை. மாவை அண்ணரும், முத்துக்குமாரசுவாமியும் ஒரே கை விலங்கு பூட்டப்பட்டு கொழும்புக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். விமானத்தில் பயணம் செய்யப்படும் போது கை விலங்கு பூட்டப்படுவதில்லை. ஆனால் இவர்கள் கை விலங்கு பூட்டப்பட்டே கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு 4ஆம் மாடியில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது கடும் சித்திரவதைக்கு உள்ளாகினர். இவருடன் கைது செய்யப்பட்ட முத்துக்குமார சுவாமி திருநெல்வேலியைச் சேர்ந்த மாவட்ட நீதிபதி, தம்பித் துரையின் மகனாவார்.

ஈழத் தமிழர் இளைஞர் இயக்கம், தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம் என்பதில் அங்கம் வகித்த முத்துக்குமாரசுவாமி தற்போது அமெரிக்காவில் உள்ள சர்வதேச மன்னிப்புச் சபையில் சட்டத்தரணியாக பணியாற்றுகின்றார்.

உரும்பிராய் சிவகுமாரனுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அவர் சிவகுமாரனின் முதலாவது சிலையை உ ரும்பிராயில் திறந்து வைத்தார். மாவை அண்ணரின் சிறை வாழ்க்கை தொடர்வான தகவல்களை அவரே கட்டுரையாளரிடம் தெரிவித்திருந்தார்.

4ஆம் மாடி விசாரணைக்கும் பின்னர் மாவை அண்ணர் வெலிக்கடை, மகசீன், அனுராதபுரம், கண்டிச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அனுராதபுரம் சிறையில் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவருடன் இருந்த சிவராசா, கண்ணாடி பத்மநாதன், செட்டி உட்பட நால்வர் சிறைச்சாலை ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றனர்.

அடுத்த நாள் சிறைக் காவலர்களும் சிங்கள சிறைக் கைதிகளும் மாவை அண்ணரை மோசமாக உருட்டி உருட்டி தாக்கினர்.

எழுந்தே நிற்க முடியாத வகையில் மாவை அண்ணர் உடம்பெல்லாம் காயப்பட்டார். இதற்குப் பின்னர் கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு தமிழ் இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

சிறையில் வயது மூத்தவராக மாவை இருந்தபடியால் தமிழ் இளைஞர்கள் எல்லோரும் மாவையண்ணருக்கு கட்டுப்பட்டனர் சிறையில் தமிழ் இளைஞர்களை கூட்டாக கட்டுக் கோப்புடன் வைத்திருந்த பெருமை மாவை அண்ணரையே சாரும்.

சிறையில் தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்திய போது மாவை அண்ணரே போராட்டத்தை ஒழுங்குப்படுத்தியிருந்தார். போராட்டத்தில் தானும் பங்குபற்றி போராட்டம் முடியும் வரை அதில் உறுதியாக இருந்தார்.

1975இல் காங்கேசன்துறைத்தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து 1973 இல் தந்தை செல்வா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

இதற்கான இடைத்தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டபோது தந்தை செல்வா சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யாமல் தான் மீளவும் போட்டியிட மாட்டேன் எனக் கூறினார். அவர் போட்டியிடாவிட்டால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று விடும் எனக் கருதிய அரசாங்கம் தமிழ் இளைஞர்களை சிறையிலிருந்து விடுவிக்க முனைந்தது.

தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு அரசாங்கத்துடன் இணைந்திருந்த நல்லூர்நாடாளுமன்ற உறுப்பினர் உ.அருளம்பலம், கல்குடா நாடாளுமன்ற உறுப்பினர் று.தேவநாயகம் போன்றோர் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயமே இதற்கு காரணமாகும்.இதனால் நிபந்தனையுடன் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டது.

அரசியல் செய்யக்கூடாது, கிராமங்களை விட்டுச் செல்லக்கூடாது என கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மாவை அண்ணர் இந்த நிபந்தனைகளை கடுமையாக எதிர்த்தார். நிபந்தனைகளுக்கு சம்மதித்து கையொப்பமிட மாட்டேன் எனக் கூறினார்.

முல்லைத்தீவில் பாடசாலை வகுப்பறைக்குள் தண்ணீர்: சிரமத்தில் மாணவர்கள்

முல்லைத்தீவில் பாடசாலை வகுப்பறைக்குள் தண்ணீர்: சிரமத்தில் மாணவர்கள்

தேசியப் பட்டியல் உறுப்பினர்

இறுதியில் பாரிய நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் வாரம் தோறும் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் தமிழ் இளைஞர்கள் ஏற்க மறுத்ததனாலேயே பிரதேச செயலர் அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என விதிக்கப்பட்டது.

மறைந்த மாவை சேனாதிராஜா தொடர்பாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு | Memoir Of Political Analyst Yothilingam On Mavai

1975ஆம் ஆண்டு தமிழர் இளைஞர் பேரவையில் செயல்பட்ட முத்துக்குமாரசுவாமி, வரதராஜப் பெருமாள், புஸ்பராஜா, தங்க மகேந்திரன், சந்திர மோகன், பிரான்சிஸ், பத்ம நாபா போன்ற இளைஞர்கள் தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து வெளியேறி தமிழீழ விடுதலை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர்.

இது தற்போதுள்ள ரெலோ இயக்கம் அல்ல. இவர்கள் வெளியேறிய பின்னர் தமிழ் இளைஞர் பேரவையின் தலைவராக காசி ஆனந்தனும் செயலாளராக மாவை சேனாதிராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் இளைஞர் பேரவை மீளவும் பிளவு பட்டு இறை குமாரன், சந்ததியார் தலைமையில் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி உருவாக்கப்பட்ட போதும் மாவை அண்ணர் தமிழர் இளைஞர் பேரவையிலேயே இருந்தார்.

தமிழ் இளைஞர் பேரவை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கட்டுப்பட்ட அமைப்பாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியை விட்டு முழுமையாக வெளியேற மாவை அண்ணன் ஒருபோதும் விரும்பியதில்லை.

1989ஆம் ஆண்டு ஜூலை 13இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மாவை அண்ணன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழர் தாயகத்தின் பின்தங்கிய மாவட்டமான அம்பாறை மாவட்டத்திற்கே அதிகம் பயன்படுத்தினார்.பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளை அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்களுக்கே ஒதுக்கியிருந்தார். பெரிய நிலாவனை மருத்துவமனையில் இவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் கட்டிடம் அமைக்கப்பட்டது.

1994ஆம் ஆண்டு தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட போதும் தெரிவாகவில்லை. 1999 ஜூலை மாதம் 29ஆம் திகதி நீலன் திருச்செல்வம் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றார்.

தொடர்ந்து 2000, 2004, 2010, 2015 தேர்தல்களில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2020 தேர்தலில் போட்டியிட்ட போதும் வெற்றி பெறவில்லை. 2004 தொடக்கம் 2014 வரை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றிய அவர் 2014 தொடக்கம் 2024 வரை தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்றினார்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் சுமந்திரன் பிரிவு அவரை கட்டாயமாக பதவி நீக்கம் செய்து சி.வி.கே சிவஞானத்தை பதில் தலைவராக்கியது.

மாவை அண்ணன் அரசியல் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டபோதும் அவர் அதனை ஏற்கவில்லை. 28ஆம் திகதி மத்திய குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவும் இல்லை.

தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவின் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான செயற்பாடுகளினால் மாவை அண்ணன் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகினார். தனக்கு முன்னாலேயே தான் வளர்த்த கட்சி சிதைந்து போவதைப் பார்க்க அவரால் சகிக்க முடியாததாக இருந்தது.

மாவையின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

மாவையின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

உயிரிழப்பு

முதுமையும், மன அழுத்தமும் அவரை கடும் நோயாளியாக்கியது. போதாக்குறைக்கு பொது வேட்பாளரை அவர் ஆதரித்தது தொடர்பாக விளக்கம் கேட்டும் கட்சியின் பதில் செயலாளர் சத்தியலிங்கம் கடிதம் அனுப்பி இருந்தார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முதல் நாள் இரவு கூட சி.வி.கே சிவஞானமும், சத்தியலிங்கமும் அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மறைந்த மாவை சேனாதிராஜா தொடர்பாக அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நினைவுப் பதிவு | Memoir Of Political Analyst Yothilingam On Mavai

இதனால் நோய் முற்றிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு புதன் இரவு 10 மணிக்கு மரணமானார்.

தமிழரசுக் கட்சி சுமந்திரன் பிரிவு மீது மாவை அண்ணரின் குடும்பத்தவர்களும், ஊரவர்களும், தமிழ்த் தேசிய சக்திகளும் கடும் கோபத்தில் உள்ளனர். மரண நிகழ்வை சுமந்திரனின் பிரிவு நடாந்த அனுமதி கேட்டபோது குடும்பத்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் பூதவுடல் வைப்பதாக ஒரு நோக்கம் இருந்த போதும் இறுதியில் அனைத்து நிகழ்வுகளும் வீட்டில் நடப்பதற்கே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் அரசியல் வரலாற்றில் மாவை அண்ணனின் மிகப்பெரிய பங்களிப்பு வடக்கு - கிழக்கு என்ற தமிழர் தாயகத்தில் பொதுக் குறியீடாக அவர் இருந்தமையாகும். கல்முனையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் மாவையின் காலத்திற்கு பின்னர் வடக்கு - கிழக்கு தானாக பிரிந்து விடும் என்று கூறினார்.

தந்தை செல்வாவிற்கு பின்னர் அரசியல் தளத்தில் பொதுக் குறியீடாக விளங்கியவர் மாவை அண்ணன் என்றே கூறலாம். இரண்டாவது பங்களிப்பு தமிழர் அரசியலில் இளைஞர் அரசியல் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தமையாகும். இதன் எழுச்சியே 30 வருடகால ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

இந்த பரிணமிப்பு தமிழ் மக்களின் விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தியுள்ளது. மூன்றாவது பங்களிப்பு தமிழ்த் தேசிய அரசியலில் அரசியல் போராட்ட கால கட்டம், ஆயுதப் போராட்ட காலகட்டம், மீண்டும் அரசியல் போராட்டம் காலகட்டம் என மூன்று காலகட்டங்களிலும் செயற்பட்டமையாகும்.

இது தமிழ்த் தேசிய அரசியலின் தொடர் இருப்புக்கு பாரிய பங்காற்றியது. தமிழ் தாயகம் இருக்கும் வரை மாவை அண்ணனின் நாமம் வாழும். 

வவுனியாவில் தொடருந்து மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியாவில் தொடருந்து மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US