இந்திய துணை ஜனாதிபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்: வலுசக்தி உள்ளிட்ட பல்துறைகளில் இணக்கம்
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(19.04.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதியை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அன்புடன் வரவேற்றுள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும் என்பதால், தனக்கு வழங்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்குத் துணை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய அரசு இணக்கம் தெரிவித்த விடயங்கள்
இதன்படி, பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்
வலுசக்தி பாதுகாப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் முதலீடுகளை அதிகரித்தல்.
2. மனிதவள மற்றும் தொழில்நுட்பம்
இந்தியாவின் தொழில்நுட்ப வெற்றிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் அரச துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
3. கடற்றொழிலாளர்களின் பிரச்சினை
இரு நாடுகளின் கட்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் அவசியம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்கள்
டிட்வா சூறாவளி அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மற்றும் இந்திய வரவு - செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்ட வலுசக்தி நெருக்கடியின் போது, 38 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை இந்தியா அவசரமாக வழங்கியதையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்திய - இலங்கை நட்புறவை மேலும் உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய நிதியுதவியுடனான வீட்டுத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இந்த உயர்மட்டச் சந்திப்பில், இந்தியத் தரப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரும், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
