இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு; பல திட்டங்கள் தொடர்பில் ரவிகரன் எம்.பி எடுத்துரைப்பு
தமிழர் தாயகப்பரப்பில் அரச கட்டமைப்புக்களினூடாக முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதி அமைக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதுடன், முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைத் தொகுதியின் கட்டுமானப்பணிகளை மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றுமுன் தினம் (23.09.2025) இடம்பெற்ற சந்திப்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். இதன்போது ஆக்கபூர்வமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.
மாகாணசபை அதிகாரங்கள்
குறிப்பாக நானும் இதன்போது பல்வேறு விடயங்கள் சார்ந்து கருத்துக்களை இந்திய உயர்ஸ்தானிகருக்குத் தெரிவித்திருந்தேன். குறிப்பாக இதன்போது மாகாணசபைகள் தொடர்பில் பேசியிருந்தேன். அந்தவகையில் மாகாணசபை முறைமையை இந்தநாட்டில் அறிமுகப்படுத்தியதே இந்தியாதான்.
ஆனால் தற்போது மகாணசபைகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தெரிவித்தேன். அத்தோடு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் என்று கூறப்பட்டு வருகின்றபோதும் நீண்டகாலமாக மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமல் உள்ளமையினையும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதேவேளை தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய அதிகமான நிலப்பரப்புக்கள் சில திணைக்களங்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தினையும் இதன்போது எடுத்துக்கூறியிருந்தேன். இவ்வாறு எமது தமிழ் மக்களின் பெருமளவான பூர்வீக நிலங்கள் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், படையினர் போன்ற அரச கட்டமைப்புக்களினூடாக அபகரிக்கப்பட்டுள்ளதால் எமது மக்கள் விவசாயம், கடற்றொழில், கால்நடைவளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுவதிலும் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்பதையும் இதன்போது தெளிவுபடுத்தினேன்.
காணி அபகரிப்புக்கள்
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச கட்டமைப்புக்களின் ஊடாக காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுள்ள விதத்தை புள்ளிவிபரங்களின் மூலம் சுட்டிக்காட்டியதுடன், வடக்கு, கிழக்கில் உள்ள எட்டுமாவட்டங்களிலும் இதே ஆக்கிரமிப்பு நிலமைகள் இருப்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.
இதுதவிர இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள்தொடர்பிலும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தேன். குறிப்பாக ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்தகாலயுத்தம் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் வட மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கடற்பரப்புக்களில் தற்போது இந்திய இழுவைப்படகுகள் அத்தமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதால், வடபகுதி தமிழ் கடற்தொழிலாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில்கூட இந்திய இழுவைப்படகுகள் தமது அத்துமீறிய சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தை நான் அவதானித்தவற்றையும் எடுத்துக்கூறினேன். எனவே இந்த விடயத்தில் கூடுதல் கவனமெடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
அதேவேளை இந்திய நிதி உதவியில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்படவிருந்த நோயாளர் விடுதி இதுவரை அமைக்கப்படாமலுள்ளமை தொடர்பிலும் இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



