உள்ளூராட்சி சபைகள் குறித்து மட்டுமே கஜேந்திரகுமாருடன் பேச்சு - சுமந்திரன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடன் இன்று மாலை நடக்கவிருக்கும் சந்திப்பில் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மட்டுமே பேசப்படும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது என்று தமது தமிழ்த் தேசியப் பேரவை முடிவு செய்திருப்பதாக கஜேந்திரகுமார் அறிவித்திருந்தார்.
கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல்
இதைத் தொடர்ந்து அவரைச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் தருமாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் கஜேந்திரகுமாருடன் தொலைபேசியில் பேசியிருந்தார்.
அவரும் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசலாம் என்று தெரிவித்திருந்தார்.
எனினும், இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் குறித்துப் பேசப்படப் போகின்றன என்பது தனக்குத் தெரியாது என்று கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
இது பற்றி சுமந்திரனிடம் கேட்டபோது, "உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து மட்டுமே இந்தச் சந்திப்பில் பேசப் போகின்றோம். வேறு எது பற்றியும் பேசப் போவதில்லை." - என்று தெரிவித்தார்.
ஆட்சியமைப்பதற்கு ஆதரவு
அவர் மேலும் கூறுகையில், "வடக்கு, கிழக்கு சபைகளில் தமிழ் பேசும் கட்சிகள் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தால் அவை அந்தந்தச் சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தருவது என்று தமிழரசுக் கட்சி ஏற்கனவே கொள்கை முடிவை எடுத்திருக்கின்றது.
அதுவும் போக, தமிழரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ள சபைகளில் தமிரசுக்கு நெருக்கமாக ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்க் கட்சியொன்று நாம் ஆட்சியமைக்க ஆதரவு தருமானால், அந்தக் கட்சிக்குத் துணை மேயர் அல்லது உப தவிசாளர் பதவியைத் தராலாம் என்றும் ஒரு கொள்கை முடிவை எடுத்திருந்தோம்.
கஜேந்திரகுமாரின் அண்மைய அறிவிப்பு எமது கட்சியின் கொள்கை முடிவையொட்டி அமைந்திருப்பதால், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து அவருடன் பேசுவது மட்டுமே இன்றைய வெள்ளிக்கிழமை சந்திப்பின் நோக்கம். வேறு எந்த விடயங்கள் பற்றியும் இந்தச் சந்திப்பில் பேசப்போவதில்லை." - என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |